Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: வெகுவிரைவில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயை எட்டப்போகிறது. ஆபரணத்துக்காக பயன்படுத்தப்படும் உலோகத்தின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்ததன் காரணம் என்ன?
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஒரு பவுன் தங்கத்தின் விலை 70 ரூபாய் மட்டுமே. இது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 2009ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் 11,600 ரூபாய்க்குத்தான் விற்கப்பட்டுள்ளது. ஆனால், பத்தே ஆண்டுகளில் அதாவது இன்று தங்கத்தின் விலை 29,808 ரூபாய்.. இது இன்னும் ஓரிரு நாட்களில் 30 ஆயிரம் ரூபாயைத் தாண்டும் என்று கணிக்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்...
வரலாறு காணாத தங்கத்தின் இந்த விலை உயர்வுக்கு பல முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. வெறும் நகைக்காக மட்டுமே தங்கம் பயன்படுத்தப்படுவதில்லை. பல்வேறு நாட்டு மக்களும் தங்க நகைகளை வாங்குகிறார்கள். குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் வர்த்தகர்கள் லாப நோக்கில் தங்கத்தை வாங்கி, விற்று லாபம் பார்க்கிறார்கள். 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் தங்கத்தின் மீதான முதலீட்டை இருமடங்காக்கி இருக்கிருக்கின்றன. இதனால் தங்கத்தின் நுகர்வு அதிகரித்துள்ளது.
‘world gold council’ தகவலின்படி, 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை, பிற நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் 480 டன் தங்கத்தை வாங்கியிருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் மொத்த இருப்பை 592 டன்னாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்திய விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 10-15 சதவீத அளவிற்கு தங்கம்தான் அங்கம் வகிக்கிறது. சர்வதேச அளவில் இந்த சிக்கல்கள் என்றால் உள்நாட்டில், 2019-20 ம் நிதி ஆண்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டதும் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்ததற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.